Tamilnadu

"டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி!

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.

அண்மையில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்களை உயர்த்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன்.

இந்நிலையில், டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

File Image

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்த லட்சுமி நரசிம்மன், அண்மையில் 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை அநியாயமாகத் தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது அ.தி.மு.க அரசு. அதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அவர் திடீர் மாரடைப்பால் மறைந்திருப்பதற்கு அ.தி.மு.க அரசே முழுக் காரணம் என்பது வேதனையளிக்கிறது.

அ.தி.மு.க அரசின் இந்த அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் மருத்துவர்களின் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. டாக்டர். லட்சுமி நரசிம்மன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.