Tamilnadu

‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் நூதன மோசடி: சென்னையில் நட்சத்திர விடுதியை விற்க முயன்ற கும்பல்!

சென்னை வடபழனி 100 அடி சாலையில் அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில், 4 பேர் கொண்ட கும்பல் ரூம் எடுத்து தங்கி நூதன திட்டம் தீட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அந்த நான்கு பேரும் விடுதிக்கு கீழே உள்ள உணவகத்தில் நீண்ட நேரமாக நட்சத்திர விடுதி குறித்தும், அங்குள்ள அறைகளின் எண்ணிக்கை மற்றும் விருந்தினர்களின் வருகை ஆகியவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த விடுதி பணியாளர் அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விடுதி பணியாளர்கள் ஒன்று கூடி துருவி, துருவி விசாரித்துள்ளனர்.

இந்த சமயத்தில் அங்கிருந்து இரண்டு பேர் நைசாக நழுவினர். மீதமிருந்த மூன்று பேரில் தட்சணாமூர்த்தி என்பவர் சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதியின் உரிமையாளர் என்றும், மற்ற இருவர் முறையே மேலாளர், ஆடிட்டர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவர்கள் மேல் சந்தேகம் அடைந்து போலிஸாரிடம் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலிஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் மோசடி கும்பல் என்றும் தங்கள் விடுதி என்று கூறி, அந்த நட்சத்திர விடுதியை விற்க முடிவு செய்திருப்பதும் தெரிவந்துள்ளது.

போலிஸார் நடத்திய விசாரணையின்போது, கருணாகரன், பரமானந்தம், தட்சணாமூர்த்தி என்ற மூன்று பேரும் சென்னை தேனாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் கேரளாவில் உள்ள சொகுசு விடுதி உரிமையாளரிடம் சென்னையில் உள்ள தங்களது நட்சத்திர விடுதியை வாங்கிக்கொள்ளும்படி பேசி அதற்காக சுமார் 160 கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர் மூவரின் பேச்சையும் நம்பி விடுதியை வாங்குவதற்காக கேரளாவைச் சேர்ந்தவர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னை வந்த அவர்களுக்கு அதே நட்சத்திர விடுதியில் ரூம் எடுத்துக்கொடுத்து, இடங்களையும் சுற்றி காட்டியுள்ளனர்.

அந்த சமயத்தில் ஊழியர்களிடம் இவர்கள் மாட்டிக்கொண்டதாகத் தெரிகிறது. இதில் தப்பி ஓடிய மற்றொருவரை தேடும் பணியில் போலிஸார் இறங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாக போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இதுபோன்ற நூதன மோசடிகள் ‘சதுரங்க வேட்டை’ சினிமா படபாணியில் நடந்து வருவதாகவும், இந்த மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டபடி மனைவியின் தலையை ஊர்வலமாக கொண்டுச் சென்ற கணவர்; உ.பியில் பயங்கரம்!