Tamilnadu

சென்னையில் போராட்டம் நடத்த தடை : #CAA போராட்டங்களை ஒடுக்க எடப்பாடி அரசின் அராஜக முயற்சி!

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் பல்வேறு அமைப்பினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலை மறியல், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி ஆகிய வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சென்னை போலிஸார் போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி 6 மணி வரை சென்னையில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலிஸ் சட்டம் 41ன்படி பேரணி, பொதுக்கூட்டம், மனிதச் சங்கிலி, போராட்டம் மற்றும் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு போலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை தவிர்க்கமுடியாத வகையில் போராட்டம் நடத்தியே ஆகவேண்டும் என்றால் போராட்டம் நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கவேண்டும்.

அனுமதி கடிதம் வழங்கிய பின்னர் பரிசீலித்து அனுமதி கிடைத்தால் மட்டுமே போராட்டம் நடத்தவேண்டும். இந்த உத்தரவை மீறிச் செயல்பட்டால் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலிஸாரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மோடி அரசு என்ன செய்தாலும் ஆதரவாகச் செயல்படும் எடப்பாடி அரசு போராட்டங்களை ஒடுக்குவதற்கு இத்தகைய அடக்குமுறையை கையாள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: "இந்தியா கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியமற்றது" - வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா கருத்து!