Tamilnadu

13 வயது பெண்ணின் வயிற்றில் அரை கிலோ தலைமுடி, பிளாஸ்டிக் பைகள் : கோவையில் மன அழுத்தத்தால் விபரீதம்

மன அழுத்தம் காரணமாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் தலை முடி மற்றும் ஷாம்பூ போன்ற பிளாஸ்டிக் குப்பைகளை கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாப்பிட்டுள்ளது அறுவை சிகிச்சைக்கு பின்னர் தெரியவந்துள்ளது.

வெகு நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிறுமியை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் கட்டி போன்று வடிவம் தென்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோவுக்கு தலை முடி, ஷாம்பூ போன்ற பிளாஸ்டிக் குப்பைகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மருத்துவர் கோகுல் கிருபாசங்கர், உறவினர் ஒருவர் மறைந்ததன் காரணமாக சோகத்தின் ஆழ்ந்த சிறுமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு அவ்வப்போது தனது தலைமுடியையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் சாப்பிட்டுள்ளார்.

இது சிறுமியின் இரைப்பையில் சென்றடைந்து சேகரமானதால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வாந்தி என உபாதைகள் ஏற்பட்டு அவதியுற்று வந்துள்ளார். இதனை பெற்றோர்கள் சரிவர கவனிக்காமலும் இருந்துள்ளனர்.

குழந்தைகள் மனச்சோர்வு அடையும் போது அவர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பேசி என்ன காரணம் என்பதை கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வை கொடுக்கவேண்டியது பெற்றோரின் கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.