Tamilnadu

எரிவாயு குழாய் பதிக்க விளைநிலங்களில் குழிதோண்டிய எண்ணெய் நிறுவனம் விரட்டியடிப்பு - தஞ்சை அருகே பரபரப்பு!

மத்திய பா.ஜ.க அரசு, பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபடலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தேவையில்லை எனச் சொல்லி உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி, புதுப்பட்டி அருகே நெல் மற்றும் எள் சாகுபடி செய்யப்பட்டிருந்த இடத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் சார்பில், எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நேற்றைய தினம் தொடங்கியுள்ளனர்.

பயிரிடப்பட்டிருந்த வயல்களில் எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தக்கோரி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அனுமதியின்றி மக்கள் விரோதமாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் வட்டாட்சியர் மற்றும் போலிஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் குழாய் பதிக்கும் பணி நடந்தால் மாநிலம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், “இந்த அரசுக்கு விவசாயிகள் பற்றியும் துளியும் கவலை இல்லை. அடுத்த வாரத்தில் இருந்து ஹைட்ரோகார்பம்ன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக எங்கள் பகுதி விவசாயிகள் தீர்மானித்துள்ளோம். இந்நிலையில் எரிவாயு குழாய் பதிக்க விளைநிலங்களை பாழ்படுத்தி குழிதொண்டுகிறார்கள். அரசு இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும். இல்லையெனில் டெல்டா என்ற பகுதியே இருக்காது” எனத் தெரிவித்தனர்.

Also Read: விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!