Tamilnadu

’குடிப்பழக்கத்தை விட சொன்ன எம்.ஜி.ஆர்..வீரம் இல்லாதவர் என்று சொன்ன சு.சாமி’: இதற்கு பதில் சொல்வாரா ரஜினி?

துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிகாந்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர், பெரியாரிய இயக்கத்தினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி மீது அவதூறு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார்களும் காவல் நிலையங்களில் குவிந்த படி உள்ளன. ஆனால் போலிஸார் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் பேசியிருப்பது சங் பரிவாரின் ஊதுகுழலாக அவர் உருவாகியுள்ளார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராதாபுரம் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ரஜினி பேசியிருப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் ரஜினி அவர்களே!! சரியோ தவறோ நீங்கள் எடுத்திருக்கும் முடிவில் உறுதியாக இருப்பதற்கு வாழ்த்துகள்!!

அதேபோல தங்களிடம் நான் எதிர்பார்ப்பது எனக் குறிப்பிட்டு இரு முக்கியமான கேள்விகளை ரஜினிக்கு முன்வைத்துள்ளார் அப்பாவு.

அதில், “ 1981ல் கமல்ஹாசனின் ராஜபார்வை திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய எம்ஜிஆர், உங்களை குறிப்பிட்டு நடிகர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். நடிக்க வேண்டும். 24 மணிநேரமும் நிஜவாழ்க்கையில் குடிப்பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும் கொண்டுள்ள ரஜினிகாந்த், திரைப்படத்திலும் அதுபோல நடிக்காமல் கமல்ஹாசன் போல இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினாரே அதற்கு தங்களின் பதில் என்ன?

2) சுப்பிரமணிய சாமி உங்களை பார்த்து கடந்த 30 ஆண்டுகளாக இந்த சமூகத்திற்காக ரஜினிகாந்த் என்ன செய்தா? அரசியல் கட்சிகளின் ஊழலுக்கு எதிராக ரஜினி இதுவரை என்ன குரல் கொடுத்தார் என்று கேள்வி கேட்டது மட்டுமல்லாமல் உங்களை பார்த்து வீரம் கிடையாது என்று சொன்னாரே இதற்கு உங்கள் பதில் என்ன?

இந்த இரண்டிற்கும் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்றும் நம்புகிறேன் என அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.