Tamilnadu

தமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயில்... கட்டண உயர்வு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம்!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 11 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவராய் குழு கடந்த 2015ம் ஆண்டு தெரிவித்தது. இதன்படி வருவாயை பெருக்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது, தனியார் மூலம் பயணிகளை ரயிலை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி பெங்களூரு என 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளன.

இதற்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்து நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்படும். ரயில்வே கட்டணங்களை மத்திய அரசின் அங்கமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சியால் கூட உயர்த்த முடியாத நிலையே இதுவரை இருந்தது. ஆனால் தற்போது தனியார் வசம் ரயில்வேத் துறை ஒப்படைக்கப்பட்டால் சாமானிய மக்கள் ரயில்களில் செல்லும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆகையால் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: தொடரும் அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு... ஐசியூவில் உள்ள மின் வாரியம் - விரைவில் திவாலாகும்?