Tamilnadu

பாலமேடு ஜல்லிக்கட்டின் போது போலிஸ் தடியடி நடத்தியது ஏன்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போட்டியின் முடிவில் காவல் துறையினர் திடீரென தடியடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த 650க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 10 பிரிவுகளாக 700 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலை பற்றி அதனை அடக்கிய இளைஞர்களும், மாடுபிடி வீரர்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் மிரட்டியபடி ஓடிய காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.

இதில், பொதும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு 16 காளைகளை அடக்கியதற்காக கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல 13 காளைகளை அடக்கிய ஐயப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜா 2வது இடமும், கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் 3வது இடமும் பெற்றனர்.

இதனையடுத்து பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுற்றதும், காளைகளை ஒழுங்குப்படுத்தும் இடத்தில், காவல்துறையினர் திடீரென தடியடியில் ஈடுபட்டனர். இதனால் காளைகள் மிரண்டு ஓடின. போலிஸாரின் தடியடியால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.