Tamilnadu

பபாசிக்கு எதிராக கொந்தளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் : வாயில் கறுப்புத் துணி கட்டி பேரணி!

அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற பபாசியின் நடவடிக்கைக்கு எதிராக நந்தனம் புத்தகக் காட்சி அரங்க வாயிலில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி பேரணியில் ஈடுபட்டனர்.

43வது சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 9ம் தேதி நந்தனம் YMCA திடலில் தொடங்கியது. புத்தகக் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது முதலே சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

புத்தகக் காட்சியில் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பக அரங்கில் அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அரங்கை காலி செய்யும்படியும் புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு, பதிப்பக உரிமையாளர் அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, புத்தக அரங்கை அகற்ற மறுத்ததாக பபாசி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவரை போலிஸார் கைது செய்தனர். நிதி உதவி தரும் எடப்பாடி அரசு விரும்புவது போல பபாசி நடந்துகொள்ள முயல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், புத்தக அரங்குகளில் புத்தக வெளியீடுகளையும், அறிமுக விழாக்களையும் நடத்தக்கூடாது எனவும் பபாசி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பபாசியின் நடவடிக்கைகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டித்துப் பேசி வருகின்றனர். நேற்று பபாசி ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்ற எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி., பபாசிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றாமல் வெளியேறினார்.

இந்நிலையில், இன்று அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என அறிவுறுத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) நடவடிக்கைக்கு எதிராக அரங்க வாயிலில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி பேரணி நடத்தினர்.

அ.தி.மு.க-வின் ஊழல் குறித்த புத்தகங்களை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் அன்பழகன் மீதான புகாரை வாபஸ் பெற வலியுறுத்தியும், பபாசியின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் பேரணி நடத்துவதாக எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.

Also Read: புத்தகம் வெளியிட தடை; ஊறுகாய் விற்க அனுமதி: எடப்பாடிக்கு 75 லட்சத்துக்கும் மேல் விசுவாசம் காட்டும் பபாசி!