Tamilnadu

தமிழகம் முழுவதும் களைகட்டிய போகி பண்டிகை : புகை மண்டலமானது சென்னை!

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும் புதியான புகுதலும் இயற்கையின் நியதி என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று பயனற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.

குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி தங்களின் வீட்டை சுத்தம் செய்து பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்பார்கள். அப்படி தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையிலேயே மக்கள் தங்களின் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.

இதில் சிலர் தங்களின் வீட்டில் உள்ள அதிகப்படியான பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரிக்கின்றனர். இதனால் சென்னை போன்ற பெரு நகரங்கள் புகை மண்டலங்களாக காட்சியளிக்கின்றன.

முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. பழைய பொருட்கள் எரிப்பதை கண்காணிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, அவர்கள் கருவிகளுடன் ஒவ்வொரு பகுதிகளையும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவை எதுவும் தற்போது பயனளிக்கவில்லை.

குறிப்பாக சென்னையில் அதிகரித்த புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியவில்லை. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது. பழைய பொருட்களை எரித்த காரணத்தால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Also Read: 7-நாட்களாக சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு: வாய் திறக்காமல் மவுனம் காக்கும் அ.தி.மு.க அரசு!

புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலைகளில் பயணிப்பவர்கள் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.