Tamilnadu
தமிழகம் முழுவதும் களைகட்டிய போகி பண்டிகை : புகை மண்டலமானது சென்னை!
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும் புதியான புகுதலும் இயற்கையின் நியதி என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று பயனற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி தங்களின் வீட்டை சுத்தம் செய்து பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்பார்கள். அப்படி தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையிலேயே மக்கள் தங்களின் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.
இதில் சிலர் தங்களின் வீட்டில் உள்ள அதிகப்படியான பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரிக்கின்றனர். இதனால் சென்னை போன்ற பெரு நகரங்கள் புகை மண்டலங்களாக காட்சியளிக்கின்றன.
முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. பழைய பொருட்கள் எரிப்பதை கண்காணிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, அவர்கள் கருவிகளுடன் ஒவ்வொரு பகுதிகளையும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவை எதுவும் தற்போது பயனளிக்கவில்லை.
குறிப்பாக சென்னையில் அதிகரித்த புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியவில்லை. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது. பழைய பொருட்களை எரித்த காரணத்தால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலைகளில் பயணிப்பவர்கள் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!