Tamilnadu

ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்திலேயே நூதன முறையில் குழந்தை கடத்தல் - அதிர்ச்சி தகவல்!

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வளாகத்தில் நூதன முறையில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரந்தேஷா போசல். இவர் குடும்பத்தினரோடு சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவர்களை அணுகி, ஷூட்டிங் நடத்த ஒரு குழந்தை வேண்டுமென்றும் தேவையான பணம் தருவதாகவும் சொல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

Also Read: ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; வேன் ஓட்டுநரால் உயிர் தப்பிய அபூர்வம் (வைரல் வீடியோ)

அங்கு குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்புவதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்பதையறிந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தைக்கு ஆடைமாற்ற மாற்றவேண்டும்; ‘ஸ்கின்’ டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக்கூறி ரந்தேஷா போசலையும், அவரது மாமியாரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு , குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை என்றதும் தேடியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பூக்கடை காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்துக்கு வந்து சி.சி.டி.வி பதிவுகள் உதவியுடன் மர்ம பெண்ணை அடையாளம் கண்டறிந்து அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை கடத்தப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.