Tamilnadu

விபத்தில் சிக்கிய சபரிமலை பக்தர்களுக்கு ஓடிவந்து உதவிய இஸ்லாமியர்கள் : தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்!

நாடு முழுவதும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்வா கும்பல் மக்களை மத ரீதியில் பிரித்து அரசியல் லாபம் பார்க்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மக்கள் தங்களின் மதச்சார்பின்மைப் பண்பை ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தென்காசியில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் வேன் தென்காசியை நோக்கி வந்தபோது பண்பொழி என்ற பகுதியில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Also Read: “தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை” : மதத்தால் மக்களை பிரிக்க முடியாது என நிரூபித்த நெகிழ்ச்சி சம்பவம்!

இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் குளிரிலும், கொசுக்கடியிலும் அவதியுற்றனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், ஐயப்ப பக்தர்கள் இருக்கும் பண்பொழி பகுதிக்கு நேரில் சென்று அவர்களை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, இரவு நேரத்தில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து, ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனப் பழுதை நீக்கி மறுநாள் காலை அவர்களை வழியனுப்பி வைத்துள்ளனர் த.ம.மு.க. நிர்வாகிகள்.

உரிய நேரத்தில் இஸ்லாமியர்களின் இந்த உதவி ஐயப்ப பக்தர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

புறப்படும்போது தங்களுக்கு உதவி புரிந்த த.மு.மு.க நிர்வாகிகளுக்கு ஐயப்ப பக்தர்கள் நன்றி கூறிச் சென்றனர்.

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மனிதமும், மனிதநேயமும் எப்போதும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் மதவாத கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.