Tamilnadu

புத்தாண்டை வரவேற்கும் மழை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

வடகிழக்குப் பருவமழை நேற்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையில் மழை மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகரின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கிழக்கு - மேற்கு திசை காற்று ஒன்றோடு ஒன்று மோதுவதால் சென்னையில் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது.

Also Read: 2019-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேவையான மழை கிடைத்தா? - என்ன சொல்கிறது வானிலை மையம்!

புத்தாண்டு தினத்தன்று பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பலரும் மழையை படம் பிடித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.