Tamilnadu

இலங்கைத் தமிழ் அகதிகளிடம் செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு - போலிஸ் அராஜகம்!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை மக்களுக்கு குடியுரிமை பற்றிய எவ்வித அம்சமும் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் 107 முகாம்களில் வசிக்கும் 59,714 இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். அதேப்போல் இரட்டைக் குடியுரிமையும் வழங்கவேண்டும் எனவும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் குடியுரிமை சட்டத்தால் இலங்கைத் தமிழ் அகதிகள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அவர்களின் கோரிக்கை உள்ளிட்டவற்றை செய்தியாக வெளியிடுவதற்கு ஜூனியர் விகடன் நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில், மக்களிடம் கருத்துக்கேட்டு செய்திகளை சேகரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட இருவர் மீதும் மார்த்தாண்டம் போலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, “ குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல். மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், விநியோகித்தல்” ஆகிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பிணையில் வெளிவரமுடியாத அளவிற்கு சட்டப் பிரிவுகளை இருவர் மீதும் பிரயோகப்படுத்தியுள்ளது போலிஸ். தமிழக போலிஸாரின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #CAAProtest : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப் பதிவு!