Tamilnadu

‘வீட்டில் நின்ற காருக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பு’: ‘ஃபாஸ் டேக்’ பயன்படுத்துபவரா நீங்கள்?- உஷார்! உஷார்!!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் அடையாள அட்டையைப் பெறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஃபாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான நம்பிக்கையான பணப்பரிமாற்றம் தொடர்பாக, குறுஞ்செய்தி மூலம் OTP எண்ணோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்யவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Also Read: வரும் டிசம்பர் 1 முதல் ‘FasTag’ கட்டாயம்... எங்கெல்லாம் பெற்றுக் கொள்ளலாம்?  என்ன தேவை?