பாத்திமா லத்தீப்
Tamilnadu

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்!

சென்னை ஐ.ஐ.டி-யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த மாதம் 8ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதிக் காப்பாளா் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ஃபாத்திமா தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸ் விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என இந்திய தேசிய மாணவா்கள் சங்கம், கேரளத்தைச் சோ்ந்த முகமது சலீம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.

ஆனால் உயர் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்தது. மேலும், சி.பி.ஐ. விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தரப்பிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஐஐடி மாணவி ஃபாத்திமா மொபைலில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையா? - தடயவியல் ஆய்வறிக்கையில் தகவல்!