Tamilnadu

குதிரையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: ஏன்? அவர்கள் சொல்ல வருவது என்ன? - வியப்பளிக்கும் செய்தி

நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளும் அன்றாடம் அதிகரித்து வருகிறது. அதிலும் போக்குவரத்து சார்ந்த தேவைகளுக்கு எந்த குறையும் இருப்பதில்லை. நடைப்பயணமாக சென்ற நிலையில் இருந்து தற்போது ஒருவர் செல்வதற்காக காரை பயன்படுத்துகின்றனர்.

அவை சில சமயங்களில் நன்மையை கொடுத்தாலும் பல நேரங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிரானதையே விளைவிக்கிறது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான காரணியாக இருப்பது அதிக எரிபொருள் பயன்பாடுதான்.

ஆகையால் அவற்றை குறைக்கும் வகையில், திருச்சி மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற நபர் புது உத்தியை கையாண்டுள்ளார்.

தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றும் இவர், இயற்கையின் மீதும், விலங்குகள் மீதும் அதீத அன்பு பாராட்டுபவர். அதிலும் நாட்டு குதிரை என்றால் அவ்வளவு பிரியம். அதற்காகவே வாட்ஸ் அப்பில், நாட்டு இன குதிரைகளை காப்போம் என ஒரு குழு ஆரம்பித்து அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், 5 குதிரைகளை வளர்த்து பராமரித்தும் வருகிறார் பால சுப்பிரமணியன். இவரது செயல் அக்கிராமத்து மக்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. பால சுப்பிரமணியன் குதிரையை வளர்ப்பதை கண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்ற 7ம் வகுப்பு மாணவனுக்கும் குதிரையின் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்ட பால சுப்பிரமணியன், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை குதிரையில் அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அழகர்சாமியையும், அந்த சிறுவன் படிக்கும் பள்ளியைச் சேர்ந்த வேலு என்ற மற்றொரு மாணவனையும் தினமும் குதிரையில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களை சிந்திக்கவும் வைத்துள்ளது என பால சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், நாட்டு இன குதிரைகளை மீட்கவும், சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துவதை தடுப்பதுமே தனது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.