Tamilnadu

இரண்டாவது மனைவியுடன் ஆடம்பரமாக வாழ்வதற்காக வாகனங்களை திருடிய கொள்ளையன் : 30 பைக், 2 கார்கள் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக திருவெறும்பூர் போலிஸாருக்கு புகார் சென்றுள்ளது. புகாரை அடுத்து பைக்குகள் திருடுபோவது குறித்து விசாரணை நடத்தினர். இதற்காக தனிப்படை அமைத்து போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்படி நேற்றையதினம் மலைக்கோயில் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தவழியாக வந்த வாகனங்களிடம் சோதனை செய்ததைப் பார்த்தபோது ஒருவர் தப்பிக்க முயன்றுள்ளார். அவரை மடக்கிப்பிடித்த போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகஸ்டின் என்பதும், அவர் வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. பின்னர் அகஸ்டினை கைது செய்த போலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்திற்குச் சென்று நடத்திய விசாரணையில் அவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

அகஸ்டின் திருடிய வாகனம்

அதில், திருச்சி, திருவெறும்பூர், பெல் தொழிற்சாலை, துவாக்குடி, லால்குடி மற்றும் திருச்சி ஜங்ஷன், கரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை திருடி விற்று வந்ததாக கூறியுள்ளார்.

மேலும், அந்தப் பணத்தை தனது இரண்டாவது மனைவியின் ஆடம்பர செலவுக்காக கொடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார். அதற்காக கடந்த இரண்டு மாதங்களில் 30 இருசக்கர வாகனங்களை திருடி 15 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். இந்த திருட்டில் அகஸ்டினுக்கு உதவியாக அவரது உறவினர் ராஜா என்பவர் இருந்துள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து அகஸ்டின் திருடிய 30 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்களை போலிஸார் பறிமுதல் செய்யவுள்ளனர். முன்னதாக கடந்த 2009ம் ஆண்டில் 10 இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் அகஸ்டின் சிறைக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.

Also Read: திருட்டு பயத்தால் பழைய பேப்பரில் மறைத்துவைத்த நகைகளை தவறுதலாக எடைக்கு போட்ட பெண் - விரைந்து மீட்ட போலிஸ்!