Tamilnadu
இரண்டு பெயரில் பேஸ்புக்கில் காதலித்த மலேசிய பெண்- தேனி வாலிபர் சிக்காததால் கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி!
தேனி வீரபாண்டி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அசோக் குமாருக்கு ஃபேஸ்புக் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அறிமுகமானார். அவர்கள் 2 பேரும் பேஸ்புக் மூலமே நண்பர்களாகப் பேசி வந்துள்ளனர். மேலும் நாளடைவில் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையே பணப்பரிமாற்றமும் நடந்துள்ளது. இந்த சமயத்தில் அமுதேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரிடம் கூறி உள்ளார்.
ஆனால் தன்னைவிட வயது அதிகம் என்பதால் தன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறி அசோக்குமார் மறுத்து விட்டார். அதன்பிறகு மலேசியாவில் இருந்து கவிதா என்பவர் அசோக்குமாரின் செல்போனுக்கு பேசி உள்ளார். தான் அமுதேஸ்வரியின் அக்கா என்று அறிமுகமாகி உள்ளார்.
திருமணத்துக்கு சம்மதிக்காததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என அசோக்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் இந்த விபரத்தை அவர் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தெரிவித்ததால் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். இதனையடுத்து அசோக்குமார் தனது சொந்த ஊருக்கே வந்து விட்டார்.
அதன்பிறகு தேனிக்கு வந்த கவிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரிடம் கூறி உள்ளார். இல்லை எனில் தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் எனது சாவுக்கு நீதான் காரணம் என எழுதி வைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அசோக்குமார் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் தேனி போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் அமுதேஸ்வரி, கவிதா ஆகிய 2 பெயர்களிலும் பேசியது ஒரே நபர்தான் என உறுதிசெய்தனர். அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்ததில் அவரது பெயர் விக்னேஸ்வரி (45) என தெரிய வந்தது. வாலிபரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நோக்கத்தில் மலேசியாவில் இருந்து வந்த விக்னேஸ்வரியை போலிஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய அசோக் குமாரை தீர்த்துக் கட்ட விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதனையடுத்து பேஸ்புக் மூலம் தேனியைச் சேர்ந்த 9 பேரை தேர்வு செய்தார். தான் பணம் தருவதாகவும் அசோக்குமாரை தீர்த்து கட்ட வேண்டும் எனவும் கூறி அவரது மொபைல் எண் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதன்பேரில் போடி அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி உள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து போடி டவுன் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலிஸார் அங்கு விரைந்து வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அசோக்குமாரை தீர்த்து கட்டுவதற்காக அவரது நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்து வந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலிஸார் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அன்பரசன் (24), கமுதியை சேர்ந்த முனுசாமி (21), அய்யனார் (39), முருகன் (21), ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜோசப் (20), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த யோகேஷ் (20), கார்த்திக் (21), தினேஷ் (22), விளாம்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் (47) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொடுத்த விக்னேஸ்வரி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஃபேஸ்புக் மூலம் மலர்ந்த காதல், ‘வெறித்தனத்தால்’ கொலை செய்யும் அளவுக்கு சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!