Tamilnadu

"உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான திட்டமே அ.தி.மு.க அரசிடம் இல்லை” - மா.சுப்பிரமணியன் MLA பேச்சு!

சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டூர்புரம் சித்ரா நகர் பழைய காவல் நிலையம் எதிரில் ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய ரேசன் கடைகளை இன்று காலை தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திற்கு உட்பட்ட, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியனின் 2018- 19ம் ஆண்டிற்கான மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த நியாய விலைக் கடை கட்டிரம் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் பேட்டியளித்த சைதாப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் தற்போதைய தமிழக அரசு இதுவரை செய்யவில்லை.

புதிது புதிதாக மாவட்டங்களையும் மாநகராட்சிகளையும் உருவாக்கும் பணியை மேற்கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்தப்போகிறது என்ற திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது.

இந்தப் பிரச்னையை தற்போதைய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை எப்போது எப்படி நடத்த திட்டமிட்டு இருந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராகவே இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.