Tamilnadu

பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் ரவுடி கும்பல்.. அச்சத்துடன் வாழும் சென்னை மக்கள்- கண்டுகொள்ளாத அரசு!

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகவும் முழுவதும் கொலை, கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகரான சென்னையில் ரவுடி கும்பலின் அட்டகாசம் பெருகியுள்ள நிலையில், அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் காந்தி நகரில் நள்ளிரவு நேரத்தில் கத்தியுடன் உலா வரும் ரவுடி கும்பல் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். தினந்தோறும் இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாலும் போலிஸார் வாகனம் வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் தப்பிவிடுகின்றனர்.

போலிஸார் சென்றதும் மீண்டும் வந்து அந்த வழியாக செல்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் காந்தி நகர் பகுதிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வருவதை பார்த்ததும் பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று கதவுகளை அடைத்துக் கொண்டனர்.

இதையடுத்து, அந்த ரவுடி கும்பல் அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், அவ்வழியாகச் செல்பவர்களை மிரட்டியும் சுமார் அரை மணி நேரம் அட்டகாசம் செய்தனர். இதையடுத்து தகவலறிந்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

அந்தப் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள விருகம்பாக்கம் போலிஸார் ரவுடி கும்பலை அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: வெடிகுண்டு வீசி, தலையை வெட்டி சினிமா பாணியில் ரவுடி கொலை : புதுச்சேரி கோவில் திருவிழாவில் பயங்கரம்