Karthick MLA
Tamilnadu

அமைச்சர் உத்தரவால் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு அனுமதி மறுப்பு - கோவை குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநாகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், தனக்கு தகவல் சொல்லப்படாமல் தனது தொகுதியில் அரசு விழா நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன், குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வந்த தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக்கை காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் காவல்துறையினர் மற்றும் அ.தி.மு.க-வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்துப் பேட்டியளித்த சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக், “கோவை மாவட்ட நிர்வாகம் அரசு விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கியிருக்கிறேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 8 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பல அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு திறமையில்லை.

உள்ளாட்சித் தேர்தல் வருகிறது என்றவுடன் தற்போது குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துகின்றனர். சட்டமன்ற உறுப்பினரான தன்னை குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் அரசு விழாவினை அ.தி.மு.க விழா போல நடத்துகின்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர்.” எனக் குற்றம்சாட்டினார்.

Also Read: “என் தொகுதி மக்களின் மனுக்களை அ.தி.மு.க அமைச்சர்கள் நிராகரிக்கின்றனர்”- தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!