Tamilnadu
''தமிழகம் முழுக்க இயல்பைக் காட்டிலும் குறைவான மழையே பதிவாகியுள்ளது'' - வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச் சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை மொத்தமாக 32 செ.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் இயல்பை விட சற்று குறைவாக 28 செ.மீ மழை மட்டுமே பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
சென்னையில் 51 செ.மீ பெய்யவேண்டிய மழை தற்போது 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 53 செ.மீ மழைக்குப் பதிலாக 33 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
பெரம்பலூரில் 32 செ.மீ பெய்ய வேண்டிய மழையானது தற்போது வரை 21 செ.மீ மட்டுமே பெய்துள்ளது. அரியலூர் 35 செ.மீ மழைக்குப் பதிலாக 19 செ.மீ மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
ராமநாதபுரம் ,நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இயல்பை விட சற்று கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரத்தில் 33 செ.மீ பெய்ய வேண்டிய மழை சற்று கூடுதலாக 44 செ.மீ பெய்துள்ளது. நெல்லையில் 32 செ.மீ மழை பெய்வதற்குப் பதிலாக 41 செ.மீ மழை பதிவாகி உள்ளது எனத் தெரிவித்தார்.
Also Read
-
மிரட்டிய அர்ஜெண்டினா.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய மெஸ்ஸி.. இங்கிலாந்துக்கு நடந்த அதிர்ச்சி!
-
ஒரு மாத தவணை கட்ட தாமதம்.. வீடு புகுந்த வங்கி ஊழியர்கள்.. வீடியோ வெளியிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!
-
நாகர்கோவில் காவல் நிலைய மரணம் : மறைக்க முயற்சி செய்த த.வெ.க. அரசு - முரசொலி விமர்சனம்!
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!