Tamilnadu
“தற்கொலையா, கொலையா?” : செங்கல்பட்டு மாணவி உயிரிழப்பு குறித்து போலிஸார் தீவிர விசாரணை!
செங்கல்பட்டு மாவட்டம் வேதநாராயணபுரம் பகுதியில் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா என்ற மாணவி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கல்பாகத்தில் தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார் கிருஷ்ணபிரியா. இந்நிலையில் கடந்த 13ம் தேதி, மாலை கல்லூரி முடிந்ததும், சக மாணவிகளிடம் எதுவும் சொல்லாமல், கல்லூரியின் இரண்டாவது மாடிக்குச் சென்ற மாணவி கிருஷ்ணபிரியா, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த மாணவர்கள் பலத்த காயமடைந்த கிருஷ்ணபிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியின் நிலைமை மோசமாக இருப்பதால் முதலுதவி மட்டும் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி கிருஷ்ணபிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு போலிஸார்,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி குறித்த எந்த தகவலையும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், மாணவி தவறி விழுந்த தகவலை கல்லூரி நிர்வாகம் போலிஸாரிடம் சொல்லாமல் மறைத்ததாகவும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காயமடைந்த மாணவியை ஏன் அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாணவின் பெற்றோர் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்த போலிஸார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் மட்டும் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !