Tamilnadu

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி மனு!

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நிலங்களை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. இந்த பகுதிகளிலும், வங்கக் கடலிலும், 341 இடங்களில் ஆழ்துளைகள் அமைக்கவும் அனுமதி வழங்கியது.

தமிழக அரசின் முடிவுக்கு விரோதமாக மத்திய அரசு, மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்ததை எதிர்த்தும், இந்த திட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்க கோரியும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்க்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் காவிரி டெல்டா பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், அரிசி உற்பத்தி பாதிப்பதுடன், குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 7 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கும், ஹைட்ரோ கார்பன் இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளது.