Tamilnadu

”கலெக்டர்னா என்ன சரவணபவன் ஹோட்டல் சர்வரா” : புகார் அளித்த நபரிடம் தகாத முறையில் பேசிய ஆட்சியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 5 நாள் மீட்பு போராட்டத்தை அடுத்து அழுகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான்.

இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை லாவகமாக மீட்க பிரத்யேக கருவி ஏதும் இல்லாததால் சுஜித் உயிரிழக்க நேர்ந்தது. இதையடுத்து மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றை மூடக் கோரி தொலைபேசியில் அழைத்த ஒருவரிடம் ”கலெக்டர் என்றால் சரவணபவன் ஹோட்டல் சர்வேரா?” என ஆவேசமாக பேசிய கரூர் கலெக்டரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூர் கலெக்டர் அன்பழகன்

கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் இருந்து ஒருவர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, தங்களது பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் நீண்ட நாட்களாக கிடக்கிறது என்று தகவல் கூறியியுள்ளார்.

அதற்கு ஆட்சியர், ”உங்களது பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவலை அளித்தீர்களா?” என கேள்வி கேட்டுள்ளார். ”தகவல் அளித்தும் ஆழ்துளைக் கிணறு மூடப்படாத நிலையில் உள்ளது. அதனால் தான் உங்களிடம் தகவல் சொல்கிறேன்” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு திடீரென கோபமடைந்தவராக “கலெக்டர் என்றால் சரவணபவன் ஹோட்டல் சர்வரா? பிளடி ராஸ்கல். போனை வை” என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார் ஆட்சியர் அன்பழகன். இந்த உரையாடல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே இது தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் ஆழ்துளை கிணற்றை மூட வலியுறுத்தியவரை திட்டியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆடியோ வெளியிட்ட வாலிபர் யார் என்று கரூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.