Tamilnadu

“அடுத்த வாரம் தமிழகத்தில் வானம் மங்கலாக காணப்படும்... ஏன் தெரியுமா?” - வெதர்மேன் எச்சரிக்கை!

கடந்த வாரம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை மூச்சுத்திணறச் செய்த மாசுக்காற்று அடுத்த வாரம் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைப் பாதிக்கும் என எச்சரித்துள்ளார் வெதர்மேன்.

காற்றின் தரமானது 6 நிலைகளில் குறிப்பிடப்படுகிறது. 0-50 புள்ளிகள் வரை சுத்தமான காற்று எனவும், 51-100 புள்ளிகள் வரை திருப்திகரமான காற்று எனவும், தொடர்ந்து 301க்கு மேற்பட்ட புள்ளிகள் அபாய கட்டம் எனவும் கணக்கிடப்படுகிறது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ‘வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“டெல்லியில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்தவர்களும், அங்கு பள்ளிகளுக்கு நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது தெரிந்தவர்களும் காற்று மாசு குறித்து அறிவார்கள்.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு தற்போது, வழக்கத்தை விட 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரம் அபாயகட்டத்தை எட்டியுள்ளது.

ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் தேவையில்லாதவற்றை எரிப்பது ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நிலவுவதால் காற்று மாசு தமிழகத்தை அரிதாகவே பாதிக்கிறது. ஆனால் இந்தமுறை மழைக்கால இடைவெளியுடன் ஒத்துப்போகிறது. எனவே, அடுத்த வாரம் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மங்கலான நிறத்துடன் காணப்படும்.

அடுத்த வாரத்தில் தமிழகத்தில் காற்றுத் தரக் குறியீடு அளவு 200-300 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசுவால் வானம் மங்கலாக இருப்பதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். வெளியே செல்லும்போது முகமூடிகள் அணிந்து கொள்வது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.