Tamilnadu

டிராஃபிக் அபராத ரசீதில் இருந்து தமிழ் மொழியை நீக்கி இந்தியை திணித்த பாஜக அரசு; சிரம் சாய்த்த அதிமுக அரசு!

இந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழியை திணிக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்., மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியை முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில்வேயில் பணியாற்றும் அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து உரையாடல்களும் இந்தியில் மட்டுமே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு தமிழகத்தில் இருந்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளிடம் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தி திணிப்பு முயற்சியை கைவிடவேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் கிளம்பும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு உத்தரவையும் வாபஸ் பெற்றது.

அதன் பிறகு, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டதாக அமித்ஷா விளக்கமளித்தார். இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு தொடங்கியுள்ளது.

சாலை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட அபராதத் தொகை ரசீது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ரசீதுகளில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபோல, மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு சிரம் தாழ்ந்து செயல்படுத்தும் அதிமுக அரசுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.