Tamilnadu
“திருவள்ளுவரை இழிவுசெய்வதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்”- பாஜகவுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
தமிழக பா.ஜ.க-வின் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் இருக்கக்கூடிய படத்தில் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிந்து, ருத்திராட்ச மாலை, பட்டை என மத அடையாளங்களைப் பூசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புக்கள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ, கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. வரலாறு நெடுகிலும் இத்தகைய முயற்சிகளை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 தினத்தையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவுகள் இதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதோடு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவருக்கு, காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய யாரும் அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது கிடையாது.
பா.ஜ.க-விற்கு சொந்த பெருமிதங்களும், வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், திருவள்ளுவரை இவ்வாறு இழிவுபடுத்துவதை தமிழ் மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவதை பா.ஜ.க நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும், திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!