Tamilnadu
“திருவள்ளுவரை இழிவுசெய்வதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்”- பாஜகவுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
தமிழக பா.ஜ.க-வின் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் இருக்கக்கூடிய படத்தில் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிந்து, ருத்திராட்ச மாலை, பட்டை என மத அடையாளங்களைப் பூசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புக்கள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ, கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. வரலாறு நெடுகிலும் இத்தகைய முயற்சிகளை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 தினத்தையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவுகள் இதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதோடு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவருக்கு, காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய யாரும் அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது கிடையாது.
பா.ஜ.க-விற்கு சொந்த பெருமிதங்களும், வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், திருவள்ளுவரை இவ்வாறு இழிவுபடுத்துவதை தமிழ் மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவதை பா.ஜ.க நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும், திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!