Tamilnadu

கழிவுநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்ட பெண் பொறியாளர் : பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலிஸார்!

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 94 வீடுகளுக்கு கழிவுநீர் அகற்று இணைப்பு வழங்குவதற்காக முறையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களாக இணைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் கேட்டுள்ளனர்.

அப்போது கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரியிடம் தான் இது தொடர்பான கோப்பு உள்ளது என்றும் கோப்பு கையெழுத்திட வேண்டும் என்றால் ஒரு லட்சம் பணம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த சங்கத்தினர் லஞ்ச ஒழிப்பு போலிஸாரை அணுகி விஜயகுமாரி மீது புகார் ஒன்றை அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலிஸார் இன்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விஜயகுமாரியின் அலுவலகத்திற்கு சென்று முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல பொறி வைத்து அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் தற்போது லஞ்ச ஒழிப்பு போலிஸார் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் விஜயகுமாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.