Tamilnadu

சென்னையில் 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது!

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 மாதமான ராஜமாதா என்கிற பெண் குழந்தை உள்ளது.

எல்லப்பன் தினசரி குடித்து விட்டு மனைவி துர்காவிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன் அவர் மனைவி துர்காவுடன் வழக்கம் போல் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது குழந்தை அழுததால் துர்கா கணவரிடம் இருந்து விலகிச் சென்று தனது குழந்தையை தூக்கி மடியில் வைத்து பாலூட்டியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த எல்லப்பன் குழந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத துர்கா தனது கணவர் எல்லப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே குழந்தையிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இருவரும் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

எல்லப்பன்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர்.நகர் போலிஸார் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 2 மாத குழந்தையை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.