Tamilnadu

''அறுத்து விடுவேன்'' - கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை மிரட்டிய முன்னாள் மாணவர் : அதிர்ச்சி வீடியோ !

கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் அரசு கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் அருளரசன். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சிவபாலன், கல்லூரிக்குள் நுழைந்து கல்லூரி முதல்வர் அருளரசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிவபாலன், கல்லூரியில் கோச்சிங் வகுப்புகளை தடைசெய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் யாரும் தன்னைப்போல் வரைவதில்லை. தன்னைப்போன்று யாராலும் வரைந்து காட்ட முடியாது என்றும் கல்லூரி முதல்வர் அருளரசனை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.

இதுதொடர்பாக, கல்லூரி முதல்வர் அருளரசன் சுவாமிமலை போலிஸில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஓவியர் சிவபாலன்

இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களில் கூறுகையில், “கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை மிரட்டிய ஓவியர் சிவபாலன், தனியாக கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனக்கு கல்லூரியில் ஓவிய ஆசிரியர் வேலை கிடைக்காத விரக்தியில் குடித்துவிட்டு வந்து அடிக்கடி இதுபோன்று அநாகரீகமாக நடந்துகொள்வார்.

சம்பவத்தன்று பெண் பேராசிரியர் ஒருவர் முன்னிலையிலேயே தகாத வார்த்தைகளைக் கூறி முதல்வரை மிரட்டினார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” எனக் கூறினர்.