Tamilnadu

“கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்தது உண்மை” - அணுசக்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த இரண்டு அணு உலைகளில் 1,000 மெகாவாட், 600 மெகாவாட் என மொத்தம் 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள உலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகளில் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு ‘டி ட்ராக்’ - D TRACK என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்விட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தப் பதிவுக்கு அடுத்து சமூக வலைதளங்களில் வைரஸ் குறித்து பீதி கிளம்பி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஆனால் ட்விட்டர் பயனர் வெளியிட்ட இந்த தகவலை, கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது.

மேலும் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும், “ அணு உலை சைபர் தாக்குதல் நடைபெற்றதாக பரவி வரும் செய்திகள் பொய்யானது. மேலும் அணு உலைகளில் செயல்படும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தனித்துவமானது. அப்படி இருக்கையில் வெளியில் இருந்து யாராலும் ஹேக் செய்ய முடியாது” என மறுத்து தெரிவித்திருந்தது.

என்.பி.சி.ஐ.எல் அறிக்கை

ஆனாலும் பலரும் இதனை நம்பாமல் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வைரஸ் தாக்குதல் நடைபெற்றது உண்மைதான் என தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “என்.பி.சி.ஐ.எல் கம்ப்யூட்டர்களில் ‘மால்வேர்’ கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சி.இ.ஆர்.டி (Indian Computer Emergency Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தனர்.

பின்னர் அணுசக்தித் துறை நிபுணர்கள் உடனே ஆய்வு செய்தனர். மேலும் அந்த கணினி அணு உலை தொடர்பான வலையமைப்பில் தொடர்பில்லாதது என்றும், கூடங்குளம் அணுமின் நிலைய கணினி நெட்வொர்க்குள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், என்.பி.சி.ஐ.எல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அணு உலையின் பெயரும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.