Tamilnadu

ரவுடிகளிடம் பறிகொடுத்த செல்போனைக் கேட்கச் சென்ற இளைஞர் படுகொலை! - 3 பேர் கைது!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 27-ம் தேதி நொச்சி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கலங்கரை விளக்கம் அருகே செல்லும்போது பூபாலன் என்பவர் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதுவதுப் போல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் பைக்கில் சென்ற கார்த்திக்கை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கார்த்தியின் விலையுயர்ந்த செல்போனை பூபாலன் பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கூடி இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பூபாலன் நொச்சி நகரை சேர்ந்தவர் என்பதால் மறுநாள் காலையில் வந்து செல்போனை வாங்கிக் கொள்ளுமாறு பொதுமக்கள் அங்கிருந்து கார்த்திக்கை அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தன்னிடம் பறித்த செல்போனை வாங்குவதற்கு மறுநாள் காலையில் கார்த்திக் நொச்சி நகருக்குச் சென்றார்.அப்போது மீண்டும் பூபாலனுக்கும் கார்த்திக்குக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் தனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் சூர்யா ஆகியோருடன் கார்த்திக்கை அடித்து உதைத்தனர்.

கார்த்திக்கும் பதிலுக்கு மூன்று பேரையும் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்துவந்த மெரினா போலிஸார் படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த பூபாலன், சூர்யா, சுரேஷ் ஆகியோர் மீது மெரினா போலிஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கார்த்திக்கிடம் பறித்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.