Tamilnadu

உயிர் பலி ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

ஆழ்துளை கிணறுகள் மூடுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும், உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு, “அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி தேவைப்படுகிறதா” என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, பேசிய நீதிபதிகள் அரசு கொண்டு வரும் விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும், ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகளுக்கான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன? விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அலட்சிய உயிரிழப்புக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கினால் மட்டும் இந்த நிலைமைகள் சரியாகி விடுமா?

ஆழ்துளை கிணறுகளை வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் முறையாக மாவட்ட மற்றும் கிராம நிர்வாகிகளிடம் தகவல்கள் வழங்குகின்றனரா? என பல்வேறு கேள்விகளை அடுக்கக்கடுக்காக முன்வைத்து இது தொடர்பாக நவம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.