Tamilnadu

“சாட்சி சொன்னதற்காக தீபாவளி அன்று நாள் குறித்த கொலையாளிகள்” : ஓவியர் வெளிட்ட வீடியோவால் பரபரப்பு!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் சுந்தர். இவர் தனது குடும்பத்துடன் எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ் நகர் பகுதியில் வட மாநில இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த சம்பவம் நடைபெறும்போது ஓவியர் சுந்தர் அந்த பகுதியில் இருந்துள்ளார். மேலும் கொலை குறித்து யாரும் சாட்சி சொல்லாத நிலையில் ஓவியர் சுந்தர் மட்டும் மதுரை காவல்துறை அதிகாரியிடம் சாட்சி சொல்லியுள்ளார். பின்னர் போலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற தீபாவளி அன்று அதே பகுதியைச் சேர்ந்த பலூன் சதீஷ், ஒண்டிப்புலி கார்த்திக், காசி ஆகிய மூன்று இளைஞர்கள் தன்னை கொலை செய்யப்போவதாக சபதம் எடுத்துள்ளதாக ஓவியர் சுந்தர் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், கொலை குறித்து சாட்சி சொன்னதற்காக தனது குழந்தைகள் மற்றும் மனைவியை தொடர்ச்சியாக இடையூறு செய்த கொலையாளிகள், தீபாவளி அன்று தன்னைக் கொலை செய்ய நாள் குறித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே எனது உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் சுந்தர். அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓவியருக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.