Tamilnadu

’எந்திரன்’ பட கதை திருட்டு: 9 ஆண்டுக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குநருக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஆரூர் தமிழ்நாடன்

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கை எழும்பூர் 2வது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் மற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13வது நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் இயக்குனர் ஷங்கர் கதையைத் திருடிப் படமாக்கினாரா இல்லையா என்பது நிரூபணமாகும். எந்திரன் படம் 2010ம் ஆண்டு வெளியான நிலையில், இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து தற்போது இயக்குநராக உள்ள அட்லீயும் கதைத் திருட்டு புகாரில் சிக்கி உள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.