Tamilnadu

“பூட்டிக் கிடந்த வீட்டில் அழுகிய நிலையில் உடல்கள்” - ஆரோவில் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் மர்மச் சாவு!

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவருடைய மனைவி மகேஸ்வரி (35). இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் கிருத்திகா (17) பிளஸ் 2 படித்து வந்தார். இரண்டாவது மகள் சமிக்ஷா (13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டிக் கிடந்தது. இன்று அதிகாலை வீட்டில் இருந்து அழுகிய நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள், ஆரோவில் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரோவில் போலிஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மேற்கண்ட நான்கு பேரும் அழுகிய நிலையில் பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிரேதங்களை கைப்பற்றிய போலிஸார் PIMS மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 4 பேரும் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமாக இறந்து கிடந்தது குயிலாப்பாளையம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.