Tamilnadu

இனி தினமும் குடைகளை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்; நாளை ஆரம்பிக்கும் வடகிழக்கு பருவமழை: - வானிலை தகவல்

தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நாளைமுதல் தொடங்க உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில், “தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தருவது இயல்பு என கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வடகிழக்கு பருவமழையே வெல்கம்! இனி குடைகளை தினமும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.

வரும் நாட்களில் வெயிலும், திடீர் மழையும் அதிகமாக இருக்கும். தமிழகத்துக்கு இந்த முறை வடகிழக்கு பருவமழை மூலம் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.