Tamilnadu

வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி எது? வானிலை மையம் தகவல்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல துறைத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான வாய்ப்புள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்துள்ளதாகவும் அதிகபட்சமாக கோபிச்செட்டிப்பாளையத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் கிழக்கு திசைக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தென்மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது.

இதனையடுத்து அக்டோபர் 17ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நிலவரப்படி வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.