Tamilnadu

“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு இனி யாருக்கும் ஏற்படக்கூடாது” - சுபஸ்ரீயின் தந்தை உருக்கம்!

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகள் சுபஸ்ரீ, அ.தி.மு.க-வினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பேனர் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதிமுக பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது மகள் இறப்புக்கு இழப்பீடாக ஒரு கோடி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது,

“என் மகளுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு இனிமேல் எவருக்கும் எந்த குடும்பத்திற்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மகளின் இழப்பு எனக்கு தாங்கமுடியாத இழப்பு. இதுபோன்று வருக்காலத்தில் நடக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். பேனர் தொடர்பாக நீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வழிமுறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்ககூடாது என்பதற்காகவும், மகளை இழந்து நாங்கள் வருந்துவது போல் வருங்காலங்களில் எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு குடும்பமும், சமுதாயமும் வருந்தக்கூடாது என்பதற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.