Tamilnadu

6 வயது பெண் குழந்தையை சித்தியே கொன்றாரா? - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் 6 வயது பெண் குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாகக் கூறப்பட்ட வழக்கில் குழந்தையின் சித்தி சூர்யகலா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் பார்த்திபன் (46) என்பவர் தனது தாய், மனைவி சூர்யகலா (38) மற்றும் ஒன்றரை வயது மகன், 6 வயது மகள் ராகவியுடன் வசித்து வருகிறார்.

பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்த நிலையில் கைக்குழந்தையான மகனை சூர்யகலா கவனித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது வெகு நேரமாக மகள் ராகவியைக் காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளார் சூர்யகலா. பின்னர் குழந்தை காணாமல் போனது குறித்து சூர்யகலா பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்து வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பார்த்திபன் பல இடங்களில் தேடியும் ராகவி கிடைக்காததால் மூன்றாவது தளமான மொட்டைமாடிக்குச் சென்று கீழே பார்த்தபோது, தரையில் இருந்த புதரில் மகள் கிடப்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார் ராகவி. உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே ராகவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் இச்சம்பவம் குறித்து சேலையூர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு வந்த போலிஸார் ராகவி உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

பார்த்திபனிடம் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ராகவி தனது முதல் மனைவி மூலம் பிறந்த மகள் என்றும் ராகவி ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே உடல்நிலை குன்றி தனது முதல் மனைவி இறந்துவிட்டார் என்றும் 3 வருடங்களுக்கு முன்பு சூர்யகலாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குழந்தை உயிரிழந்தது குறித்து சூர்யகலாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் ராகவியை அவர் கொலை செய்து இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவரைக் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.