Tamilnadu

பொதுப்பணித்துறையில் நிரப்பப்படாத 7,000 காலி பணியிடங்கள்: தனியாருக்கு தாரைவார்க்க தமிழக அரசு திட்டம்?

பொதுப்பணித்துறையில் ஏழாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் தொய்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு கட்டடங்கள் கட்டுதல், அணை, ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை புனரமைத்தல் ஆகிய பல்வேறு பணிகள் பொதுத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் காலியாகும் பொதுப்பணித்துறைக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர், தொழில் அலுவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு தொழிலாளர், எலட்ரீசியன் என ஏழாயிரம் பணியிடங்கள் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ளன.

இந்த காலி பணியிடங்களை நிரப்பாததால் திட்டப் பணிகள் மற்றும் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், காலி பணியிடங்களை நிரப்பாமல் தனியாருக்கு தாரைவார்க்க தமிழக அரசு அக்கறை காட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.