Tamilnadu

“3 பெண் குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தாய்” - கடலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சத்தியவதி தம்பதி. இவர்களுக்கு அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அக்சயா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், சிறுகுழந்தைகளான நந்தினி, தர்ஷினி ஆகியோர் தாய் சத்தியவதி பராமரிப்பில் வீட்டில் வளர்ந்து வந்தனர்.

மணிகண்டன் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்துள்ளது. சத்தியவதி தனது குழந்தைகளுடன் கீழமணக்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தனது தாய் வீட்டில் இருந்து கிளம்பிய சத்யவதி கணவரின் வீடான சாத்தப்பாடி கிராமத்திற்கு வரவில்லை. இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் சத்தியவதி மற்றும் குழந்தைகளைத் தேடிவந்தனர்.

பின்னர், சேத்தியாத்தோப்பு போலிஸார் சத்தியவதியைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், மூன்று குழந்தைகளையும் வாய்க்காலில் வீசி அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகளை வீசியதாக சத்தியவதி கூறிய வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் குழந்தைகளின் உடல்களை போலிஸார் தேடினர்.

அப்போது அக்சயா, நந்தினி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு ஷிவானியின் உடலும் மீட்கப்பட்டது. இறந்த குழந்தைகளை கட்டிக் கொண்டு மணிகண்டன் கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.