Tamilnadu

“ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை தி.மு.க கடுமையாக எதிர்க்கும்” - தயாநிதி மாறன் உறுதி!

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளர் தாமஸ் ஜானை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே பொது மேலாளரிடம் கொடுத்துள்ளோம். காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் 9 பெட்டியாக இருப்பதை 12 பெட்டியாக மாற்ற வேண்டும். எஸ்கலேட்டர் வசதி, வயதானவர்களுக்கு பேட்டரி கார் வசதியை இலவசமாக வழங்கவேண்டும்.

7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். புறநகர் ரயிலில் தானியங்கி கதவு அமைக்க வேண்டும். டிக்கெட் கவுன்ட்டர்களை அதிகரிக்க வேண்டும். மேலும் பல இடங்களில் தமிழ் தெரியாத ஊழியர்கள் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர். பொதுவாக அந்தந்த மாநிலத்தவரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க நிச்சயம் தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கும். தனியார் ரெயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும், இது தொடர்பாக ரயில்வே மந்திரியை சந்தித்து வலியுறுத்துவோம்.

இந்தியாவில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என பிரதமர் மோடி நேற்று காந்தி பிறந்த நாள் உரையில் கூறியிருந்தார். அதனை வரவேற்கிறோம். ஆனால், அதே சமயத்தில் தாம்பரம் - சென்னை, அரக்கோணம் - சென்னை வரும் பல ரயில் நிலையங்களில் கழிவறை வசதி இல்லை'' எனத் தெரிவித்தார்.