Tamilnadu
“டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக்குறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாவதும் நிகழ்கிறது. இந்நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அரசு மெத்தனம் காட்டுவதும் தான் காரணமென சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூகக் கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக, டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!