Tamilnadu

தமிழக காவல்துறையில் ரூ.350 கோடி மெகா ஊழல் - அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் வாக்கி டாக்கி கொள்முதலில் நடைபெற்ற மெகா ஊழல் தற்போது அம்பலமாகியுள்ளது.

ஒதுக்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிக தொகைக்கு டெண்டர் விட்டதும், அந்த டெண்டரிலும் லைசென்ஸ் இல்லாத ஒரே ஒரு நிறுவனத்தை பங்கேற்கச் செய்து அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தத்தை வழங்கி ரூ.84 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்பட்டதுடன் , சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

வாக்கி டாக்கி முறைகேட்டிற்கே இன்றளவும் தீர்வு எட்டப்படாத நிலையில், தமிழக காவல்துறையில் மேலும் ஒரு மாபெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது.

காவல்துறை நவீனபடுத்துவதற்காக வாங்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் சிசிடிவி கேமிரா கொள்முதலில் ரூ.350 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரமும் பூதாகரமாகும் என்பதால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையை சீர்படுத்தி ஊழலை தடுப்பதுடன் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊழல் தொடர்பாக கடிதம் வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக காவல்துறைக்கு சிசிடிவி உள்ளிட்ட கருவிகள் கொள்முதல் செய்வதில் ரூ.350 கோடி மெகா ஊழல் நடந்திருப்பதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றம் முன் நிறுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.