Tamilnadu

சுபஸ்ரீ மரணம் : சட்டவிரோத பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு அக்.,11 வரை சிறை!

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி அ.தி.மு.க பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், பேனர் வைக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்ததோடு, விதியை மீறி பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலை கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வைத்து தனிப்படை போலிஸார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜெயகோபாலை ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டார்லி, சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா என கேட்க, அதற்கு பேனர் வைத்தது தவறுதான் என ஜெயகோபால் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயகோபாலுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.