Tamilnadu

உதித் சூர்யாவை தொடர்ந்து வரிசையாக சிக்கிவரும் மாணவர்கள்... நீட் ஆள்மாறாட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக சென்னை மாணவி உட்பட 6 பேர் சிபிசிஐடி போலிஸில் சிக்கியுள்ளனர்.

உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தன. அதைத்தொடர்ந்து, அவர்களைக் கைது செய்து சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அந்த 3 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக இன்று மேலும் 3 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை சிபிசிஐடி போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதித் சூர்யாவைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 7 பேர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. அனைவரிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டியல் மேலும் அதிகரிக்கும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.