Tamilnadu

திருமணத்துக்கு வரும் குழந்தைகளை குறிவைத்து கொள்ளை : வாட்ஸ்அப் மூலம் சிக்கிய பலே கொள்ளையன்!

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிபவர் சசிகுமார். இவர், கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது காவலரின் மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தலைமை காவலர் வடபழனி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவையும், மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவையும் ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த தலைமைக்காவலர் மகளின் கழுத்திலிருந்து நகையை திருடுவது பதிவாகி இருந்தது.

பின்னர், உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருமண வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபருக்கு தேடி வந்தனர். வீடியோ பதிவுகளை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட காவல்துறையினருக்கு புதுச்சேரியிலும் இதேபோன்று சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

விசாரணையில் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் செயினை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் வேலூருக்கு விரைந்த தனிப்படை போலீசார் புருஷோத்தமன் கூடுவாஞ்சேரியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இதனையடுத்து புருஷோத்தமனிடம் விசாரணை நடத்தியபோது இதேபோன்று 7 வழக்குகள் அவர் மீது இருப்பதாக தெரியவந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நகையைத் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புருஷோத்தமனிடம் இருந்து 16 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.